tamilnadu

img

சமூக பொருளாதார நீதி - என்.குணசேகரன்

இன்று, அதிகமாகப் பேசப்படுகிற சமூக நீதி குறிக்கோள் ஏன் இன்னமும் கானல் நீராகவே உள்ளது. இதற்கான விடை, என்ன தவறுகள் கடந்த காலத்தில் நடந்தன என்பதை கண்டறிவதில்தான் அடங்கியுள்ளது. “எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது; எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது; எது நடக்குமோ அதுவும் நன்றாகவே நடக்கும்” என்ற கீதை வழியில் இப்பிரச்சனையை பலர் அணுகுவது சரியில்லை. சமூக நீதிப் பிரச்சனைகள் இன்றளவும் நீடிப்பதற்கு கடந்த காலத்தில் அவற்றை கையாண்ட விதம்தான் காரணம். இன்றைய நிலைமை என்ன? தினந்தோறும், இந்தியா முழுமையும் தலித் மக்கள் மீது அதிகரித்து வரும் தாக்குதல்களை கட்டுப்படுத்த முடியவில்லை; 2016-ல்  அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட புள்ளிவிவரங்களின் படி, பட்டியல் சாதியினர் மீதான தாக்குதல்கள் தொடர்பாக 40, 000-க்கும் மேற்பட்ட குற்றங்கள் பதிவாகியுள்ளன.  இது மிக குறைவாக பதிவு செய்யப்பட்ட கணக்கு; இவற்றி லும் தண்டனை பெற்றோர் மிகவும் சொற்பமானவர் கள்தான். ஏன் இந்நிலை நீடிக்கிறது? பழைய பிராமணிய கருத்தியல் ஆதிக்கம், பொரு ளியல் மற்றும் சித்தாந்தத் துறை ஆகிய இரண்டிலும் கொடூர மான புதிய அவதாரத்துடன் தாண்டவமாடுகிறது. இதனால்,  ஒடுக்குமுறை மனோபாவம் இன்றும் நிலைத்திருக்கின்றது. எங்கே தவறு நடந்தது? தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகள் அமைப்பு, அரசிய லமைப்பின்படியான அரசியல் வடிவங்கள், மற்றும் சட்ட அமைப்புகள் ஆகியவற்றை விடுதலைக்குப் பின் பதவிக்கு வந்த அரசியல் தலைமை உருவாக்கியது. டாக்டர் அம்பேத்கர் அவர்களின் சமூக நீதியின்பாற்பட்ட மகத்தான பெரு நோக்கால், அரசியல் சட்டமானது, அனைத்து குடி மக்களுக்கும் சாதி, மத, தேசிய இனப் பாகுபாடின்றி உரிமையையும், நியாயத்தையும் உறுதிபடுத்தியது.  ஆனால் ஒரு உண்மை மறக்கக் கூடியதல்ல. விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்ற சாதாரண மக்களின் உணர்வுகளும் தேவைகளும்தான் இந்திய ஜனநாயக முறை உருவாக்கத்திற்கு உந்துசக்தியாக இருந்தது. அவர்களே, தேச உருவாக்கம், சமூக நீதி சார்ந்ததாக அமைந்திட தலைமையை உந்தித் தள்ளிய சக்திகள். அந்த சாதனை நாயகர்களான சாதாரண மக்களுக்கு  துரோகமிழைக்கப்பட்டது. பழைய வர்ணாசிரம முறை யுடன், அரசியல் மேல்தட்டுப்பிரிவினர் சந்தர்ப்பவாத சமரச கூட்டணி ஏற்படுத்திக் கொண்டனர். இதன் பொருளாதார வெளிப்பாடு என்ன? பழைய நிலப்பிரபுத்துவ அடிமை முறை மாறிய சூழலில், புதிய வழிகளில், அது மேம்படுத்தப்பட்டது. இதனால் சாதி மத ரீதியான பிளவு, ஒடுக்குமுறை கருத்தியல் நீடித்து வருகிறது.
70சதவீதம் நிலமற்ற குடும்பங்கள்
இன்னமும் 70 சதவீதமான கிராமப்புற குடும்பங்கள் நிலமற்றவர்களாகவே உள்ளனர். விவசாய உற்பத்தியின் மூலம் பெறப்படும் உபரி வருமானம் விவசாயி களுக்கும் தொழிலாளர்களுக்கும் மறுபகிர்வு செய்யப்பட வில்லை. மேல்தட்டு வர்க்கத்தின் கைகளில் செல்வம் குவிக்கப்பட்டது. நகரங்களுக்கு இடம் பெயர்ந்த முத லாளித்துவ நில உடைமையாளர்களும் இந்த குவிப்பின் பகுதியாக இருந்தனர். உழைப்புச் சக்தியை மலிவாக விற்று அடித்தட்டில் அவதியுறும் பகுதியினர் ஒருபுறம், செல்வக்குவியலில் செழிக்கும் ஒரு கூட்டம் மறுபுறம் என்கிற நிலையில் சமூகநீதிக்கு இடம் ஏது? சொத்துக் குவியல் பற்றிய ஆக்ஸ்பாம் கணக்கெடுப்பின்படி, 2016ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டிற்கும், 2019 ஆம் ஆண்டின் அதே காலத்திற்கும் இடையில் உருவாக்கப்பட்ட மொத்த செல்வங்களில் 82% மேல்தட்டில் உள்ள 1% க்குச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இந்தியாவில், சாதாரண தொழி லாளர்களின் வருமானம் ஆண்டுக்கு சராசரியாக 2% மட்டுமே உயர்ந்துள்ளது என்பதையும், அதே நேரத்தில் கோடீஸ்வரர்களின் செல்வம் கிட்டத்தட்ட ஆறு மடங்கு அதிவேகமாக உயர்ந்துள்ளது என்பதையும் கருத்தில் கொள்ளாமல், சமூக பொருளாதார நீதி பற்றிய பிரச்சினையை நாம் ஆராய முடியாது. அரசியல் தலைமை, நிலப்பிரபுத்துவ சமூக சக்திகளு டன் கொள்கை ரீதியாக செய்து கொண்ட சமரச வரலாறு, அநீதியான சமூக சொத்துப்பகிர்வு ஆகியவற்றைப் பற்றிய விழிப்புணர்வே சமூக நீதியின் இலக்கை அடைவதற்கான முதற்படி. இத்தகைய வரலாற்றுத் தவறுகளே இன்று சாதி மத அடையாளங்கள் சார்ந்த அணி சேர்க்கையை இந்துத்துவ சக்திகள் முன்னெடுக்க வாய்ப்பை ஏற்படுத்தியது. நவீன ஜனநாயகம் இந்தியாவில் பழைய அழித் தொழிக்க வேண்டிய மதிப்பீடுகளுடன் இணைந்திருக்கும் முரண்பாடு நீடிக்கிறது. ஒவ்வொரு தேர்தலிலும் சாதி மத அடிப்படையில் வாக்குகள் திரட்டப்படுவது இதன் ஒரு வெளிப்பாடு.
எட்டாக்கனியாக பாலின சமத்துவம்
அதன் மற்றோரு வெளிப்பாடு பாலின சமத்துவத்தை எட்டாத குறிக்கோளாக அது மாற்றியுள்ளது. சமூக நீதியின் முக்கிய அம்சமான பாலின சமத்துவம் இந்திய அரசியலமைப்பின் முன்னுரை, அடிப்படை உரிமைகள், அடிப்படை கடமைகள் மற்றும் வழிநடத்தும் கோட்பாடுகள் அனைத்திலும் வலியுறுத்தபட்டுள்ளது. ஆனால், சாதி உணர்வின் எழுச்சி, மத பிற்போக்குத்தனம், புதிய தாராள மய நுகர்வு கருத்தியல் ஆகியவை பாலின சமத்துவத்தை தொலைதூரக் கனவாக ஆக்கியுள்ளன. குடியிருப்பு மற்றும் பணியிடங்களில் பாலின வன்முறை, துன்புறுத்தல்கள் அதிகரித்து வருவது இதன் வெளிப்பாடு. தேசிய குற்றப்பதிவு அமைப்பின் புள்ளி  விவரங்களின்படி,  ஒவ்வொரு நாளும் 109-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப் படுகிறார்கள். இது முந்தைய ஆண்டை விட 22 சதவீதம் அதிகரித்துள்ளது. நம் குழந்தைகளைப் பாதுகாக்கும் பிரச்சினை சமூக நீதியின் ஒரு முக்கிய அங்கம். நூற்றுக்கணக்கான விதிகள், சட்டங்கள் மற்றும் திட்டங்கள், விவசாய சீர்திருத்தங்கள்,  தொழிலாளர் சீர்திருத்தங்கள், கல்வி தொடர்பான கொள்கைகள், சுகாதாரத் திட்டங்கள் என பல மக்கள் நல சட்டங்கள் பல உள்ளன. சமூக மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய பிரிவினரின் முன்னேற்றத்திற்கான இடஒதுக்கீடு முறை உள்ளது. ஆனால் இவை அனைத்திலும் விதிமீறல்கள் தொடர்கின்றன. அவை பெயரளவிற்கானவையாக மாறியுள்ளன. சமத்துவம் குறித்த அரசியலமைப்பு வாக்குறுதிகள் (பிரிவு 14), வாழ்க்கை மற்றும் தனிப்பட்ட சுதந்திரத்தை பாதுகாப்பதை உறுதி செய்வதற்கான வாக்குறுதிகள் (பிரிவு 21) நடைமுறைப்படுத்தப்படுவதில்லை. மேல்மட்ட சட்டங்கள், திட்டங்கள் கீழளவில் நிலைமையை மாற்ற வில்லை. மேல்மட்ட அரசியல் தலைமை சமூக நீதி இலக்கு களை அடைந்திட உண்மையான அரசியல் உறுதியை ஒருபோதும் காட்டவில்லை. “மேலே” இருந்து இதனை அடைய முடியாது; “கீழே” இருந்து கட்டப்படும் சமூக நீதி மறுக்கப்பட்டவர்களின் சமூக இயக்கத்தால் மட்டுமே அடைய முடியும். சமூக பொருளாதார நீதியை அடைந்திட, உழைக்கும் மக்களின் விழிப்புணர்வு, ஒற்றுமை, கூட்டான நடவடிக்கைகள் முக்கியமானவை. உறுதியான, தெளிவான நிகழ்ச்சி  நிரலுடன் வலுவான மக்கள் இயக்கத்தை உருவாக்கு வதைத் தவிர வேறு வழியில்லை.
வர்க்கமும், சாதியும்
தோழர் இ.எம்.எஸ்.நம்பூதிரிபாட், வர்க்கத்தை உள்ளடக்கம் எனவும் அதன் வடிவம் சாதி எனவும் வரை யறுத்தார்; சமூக இயக்கத்தில் இரண்டும் பின்னிப் பிணைந்துள்ளது என்றார். எனவே, சமூக மற்றும் பொரு ளாதார நீதி இரண்டும் ஒன்றோடொன்று இணைந்தவை. சாதியை ஒழிப்பதற்கான அம்பேத்கரின் சிந்தனை,  அனைத்து ஒடுக்குமுறைகளையும் ஒழித்து,  சமத்து வத்திற்கு வழிகாட்டும் மார்க்சிய சிந்தனை ஆகிய இரண்டி லும் அறிவாராய்ச்சிக்கும்,  செயல்திட்டத்திற்கும் வளமான அடிப்படைகள் உள்ளன. இந்த செயல்திட்டம், வர்க்கச் சுரண்டலற்ற, சாதிப் பாகுபாடற்ற சமத்துவ சமுதாயம் அமைப்பதை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும். சமூக கண்ணியம்,  சமமான சமூக அந்தஸ்து ஒருவருக்கு ஏற்பட வேண்டுமானால் அவருக்கு பொருளா தார வல்லமை தேவை.
‘நீதி’என்பது என்ன?
பல தத்துவவாதிகள் ‘நீதி’ என்ற வார்த்தையை பல வழிகளில் வரையறுத்துள்ளனர். நீதி என்பது “ஒவ்வொரு வருக்கும் அவர் பெற வேண்டியதைக் கொடுப்பது” என்பதாகும். நீதி,  பற்றிய அறிவியல் ரீதியான, வரலாற்று  ரீதியான வரையறைக்கு மார்க்ஸையே நாடவேண்டியுள்ளது. மார்க்ஸ் “கோதா திட்டத்தின் திறனாய்வில்” குறிப்பிட்டார்: ‘‘உழைப்பின் விடுதலையானது, தொழிற்கருவிகளை சமூகத்தின் பொதுவான சொத்துக்களுக்கு உயர்த்து வதையும், உழைப்பின் வருமானத்தை நியாயமான முறையில் விநியோகிப்பதன் மூலம் மொத்த உழைப்பின் கூட்டுறவு ஒழுங்குமுறையையும் கோருகிறது.” எனவே, வருமானத்தின் நியாயமான விநியோகம் என்பதுதான் மார்க்சிய நீதிக் கோட்பாட்டின் அடித்தளமாகும். இது இயற்கையாகவே சோசலிசம் என்று அழைக்கப்படும் மாற்று சமூகம் பற்றிய சிந்தனைக்கு இட்டுச்செல்கிறது. சோசலிசம் இந்திய அரசியல் அமைப்பின் இலக்காக ஏற்றுக்கொள்ளப்பட்டது. சோசலிசம் என்ற சொல் 1976-இல் 42-வது திருத்தத்துடன் அரசியலமைப்பின் முன்னுரையில் சேர்க்கப்பட்டது. இது எந்த நோக்கத்தில் சேர்க்கப்பட்டிருந்தாலும் அது ஜீவனற்ற வார்த்தையாக இருக்கக்கூடாது. உண்மையான சமூக மற்றும் பொருளாதார நீதியை அடைய சோசலிசக் கருத்தை இந்திய சூழலுக்கு ஏற்ற இலட்சியமாக்கிட வேண்டும். சமூக மற்றும் பொருளாதார அநீதி குறித்த விழிப்புணர்வு வளர்ந்து வருகிறது. இதனை தெளிவான கண்ணோட்டத்துடன் வளர்த்திட வேண்டும்; இல்லாவிடில், அடையாள அரசியல் வலுப்படும். அது, ஒருபோதும் சமூக பொருளாதார நீதிக்கு வழிவகுக்காது. கட்டுரையாளர்: சென்னையில் நடைபெற்ற அகில இந்திய முற்போக்கு மன்றத்தின் 11 வது பட்டறையில் முன்வைக்கப்பட்ட கருத்துத்தாள்)